யானைகள் சரணாலயத்திலும் பின்னவெல யானைகள் பாதுகாப்பு சரணாலய நிலையத்திலும் யானைகள் தாக்கி உயிரிழந்த இரண்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கும் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் அவர்களுக்கு நேற்று (08) பணிப்புரை விடுத்துள்ளார்.
இவர்களுக்கு நிரந்தர நியமனம் இல்லாவிட்டாலும் யானைகள் சரணாலயத்தில் உயிரிழந்த வனவிலங்கு ஊழியர்களின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம், பணியின் போது ஊழியர்கள் மரணமடைந்தால் அவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படாததால் இழப்பீடு வழங்குவதற்கு வசதியாக அந்த கட்டளை சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார். திருத்தங்களை உள்ளடக்கிய ஒரு பத்திரத்தை சமர்ப்பித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் செயலாளரிடம் தெரிவித்தார்.
பின்னவல யானைகள் பாதுகாப்பு நிலையத்தில் உயிரிழந்த வனஜீவராசிகள் அதிகாரி நிரந்தர அரச ஊழியர் என்பதனால் குறித்த உத்தியோகத்தருக்கு பணியின் போது ஏற்படும் விபத்து மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு நட்டஈடு வழங்க வாய்ப்பு உள்ளது. அதன்படி, அந்த அதிகாரிக்கு இழப்பீடு வழங்க வனவிலங்கு திணைக்களத்திற்கு அதிகாரம் உண்டு.