உலக சிறுவர் தினமான ஒற்றோபர் மாதம் 01ஆம் திகதியன்று தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை இவ்வருடம் ஒரே நாளில் பெற்ற அதிகூடிய வருமானத்தை பதிவு செய்துள்ளது.
தேசிய தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அன்றைய தினம் கிடைத்த மொத்த வருமானம் ரூ.50,80,377.
அதேநேரம், உலக சிறுவர் தினத்தன்று மற்றைய அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் இதுவரையில் கிடைக்காத அதிகூடிய வருமானத்தை ஒரே நாளில் பெற முடிந்ததாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் நேற்று (04) கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுக்கு அறிவித்தது.
இதன்படி பின்னவல யானைகள் சரணாலயத்தின் வருமானம் 9,47,000 ரூபாவாகும். பின்னவல மிருகக்காட்சிசாலை ரூ.9,49,200 தொகையையும் மற்றும் ரிதியகம சஃபாரி பூங்கா ரூ.8,56,000 தொகையையும் சம்பாதித்தன.
தேசிய விலங்கியல் திணைக்களம் சிறுவர்களையும் மற்றும் 60 வயதுடைய பெரியவர்களையும் இலவசமாக மிருகக்காட்சிசாலைக்குள் நுழைய அனுமதித்துள்ள போதிலும், இவ்வளவு அதிக வருமானம் கிடைப்பது இதுவே முதல் முறை என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.திலக் பிரேமகந்த தெரிவித்தார்.
எதிர்வரும் உலக மற்றும் தேசிய தினங்களிலும் உயிரியல் பூங்காக்களுக்கு மக்களை கவரும் வகையில் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.