இலங்கையில் சின்ன வெங்காய பயிர்ச்செய்கைக்கு இலவச காப்புறுதியை வழங்க விவசாய அமைச்சு நேற்று (12) தீர்மானித்துள்ளது.
தற்போது விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் 06 வகையான பயிர்களுக்கு இலவச விவசாய காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நெல், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சோயா போன்ற பயிர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்புறுதியில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதமும், வறட்சி மற்றும் கனமழை ஆகியவற்றினால் ஏற்படும் பயிர் சேதமும் அடங்கும்.
2024 ஆம் ஆண்டு இலங்கையில் சின்ன வெங்காய பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தும் வேலைத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம் ஏற்பட்டால், மேற்குறித்த விடயங்களுக்கு இணங்க விவசாயிகளுக்கு இலவச இழப்பீடு வழங்குவதற்காக காப்புறுதிப் பயிர்களில் சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மஹிந்த அமரவீர நேற்று (12) விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையிடம் தெரிவித்தார்.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையால் ஏக்கருக்கு 40,000 ரூபா நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சின்ன வெங்காய பயிர்கள் சேதமடையும் பட்சத்தில் அவ்வாறான நஷ்டஈட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்.
நேற்று (12) பிற்பகல் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் அதிகாரிகளுடன் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினதும் மற்றும் விவசாய அமைச்சினதும் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டது.